Monday, January 29, 2007

மாறித்தான் போய்விட்டது வாழ்க்கை!

ஆன்லைனில்
ஆண்டவனுக்கு
அர்ச்சனை செய்ய முடிகிறது! ஆனால்,
நேரில் சென்று
கூடி வழிபடுவது
குறைந்து போகிறது!

கழிவறையிலும்
கைத்தொலைபேசியில்
கலந்துரையாட முடிகிறது! ஆனால்,
எடுத்ததற்கெல்லாம் தொலைபேசி
குறுக்கீடுகள் கூடிப்போய்
நிம்மதி தொலைகிறது!

வரிசையில்
நிற்காமலேயே
வங்கிப்பணிகள்
சாத்தியம் ஆகிறது! ஆனால்,
மறைச்சொற்கள் தான்
அடிக்கடி மறந்து தொலைக்கிறது!

கைக்காசு
இல்லாமலேயே
அட்டையைத் தேய்த்து
ஆடம்பரம் வாங்கமுடிகிறது! ஆனால்,
பணம் கட்டும்போதுதான்
வட்டியும் முதலும்
கையைக் கடிக்கிறது!

வீட்டிலிருந்தே
அலுவலகப் பணியை
ஆற்ற முடிகிறது! ஆனால்,
விடுமுறையன்றும்
வேலை செய்து
வெறுத்துப் போகிறது!

வீட்டிலிருந்தே
சின்னத்திரை மூலம்
சினிமா டிராமா நாட்டுநடப்பை
தினமும் பார்க்க முடிகிறது! ஆனால்,
தொடர்ந்து பார்த்து
நேரம் தொலைத்து
ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது
குறைந்து போகிறது!

போகிற இடங்களில்
ஏற இறங்க
எஸ்கலேட்டர்
உதவியாய் இருக்கிறது! ஆனால்,
கைகால்களுக்கு
இயற்கையான உடற்பயிற்சி கூட
இல்லாமல் போகிறது!

வளர்ந்துவரும்
அறிவியல் வளர்ச்சி
வாழ்க்கைக்கு வசதியைத் தருகிறது ஆனால்,
அளவுக்கு மேலே
அனுபவிக்கும் வசதியால்
ஆனந்தம் குறைகிறது!

Tuesday, January 16, 2007

இறந்தவன் வீடு

சவம் சலனமற்று
பட்டு போர்த்தப்பட்டு
படுக்க வைக்கப்பட்டிருந்தது
அறையெங்கும்
சிவப்பு ரோஜா மாலைகள்
சிந்தியிருந்தன சோக இதழ்களை
தலைமாட்டில் பத்தி
நெளிந்து புகைந்து கொண்டிருந்தது!
கால்மாட்டில் பூவை
இழந்தவளின் கண்ணீர்ப்புலம்பல்
அறையெங்கும் வழிந்தோடியது!
சுற்றிலும் சோகம் தேக்கி
சொந்தபந்தங்கள்
உறவுகள் நண்பர்கள்
சவத்துக்குரியவனின்
நேற்றைய வாழ்க்கையை
இன்றைய விசாரணையில்
அலசிக்கொண்டு
நாளைய சவங்கள்!
அப்போது தவிர்க்க முடியாமல்
வேறொரு நினைப்பும்
வேர் விட்டு முளைத்தது!
‘நீயும் ஒருநாள் இதுபோல்
விசாரிக்கப்படுவாய்’ என்று
எல்லாம் மறந்து விட்டு
மறுநாள் விடிந்தது!

Monday, January 15, 2007

புல்லாங்குழல்களின் கதை

புலம் பெயர்ந்த
புல்லாங்குழல்கள்
அடுப்பூதுவதில்
ஆனந்தமடைந்தன
மூச்சுவிடக்காற்று கிடைத்ததால்!

உள்ளூர்
ஊமைகளுக்குப்
பாடற்பயிற்சி அளிக்கலாம்
என்ற முயற்சிக்கு வரவேற்பிருந்தது!

புற்றுப்பாம்புகள்
பாலுக்கும் முட்டைக்கும் மயங்கி
சீறுவதை மறந்து விட்டன!
ஊருக்குள் பாம்புப்பயம் போய்விட்டதால்
வளர்ப்புப்பிராணியாக வத்துக்கொள்ள
பலர் முன்வந்தனர்!

Sunday, January 14, 2007

எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் நூல் வெளியீடு - அழைப்பிதழ்

வருகிற 21 ஜனவரி 2007, ஞாயிறு மாலை 5 மணிக்குசிங்கப்பூர் அங் மோ கியோ நூலக அரங்கில் திருமதி ஜெயந்தி சங்கரின் 4 நூல்கள் வெளியீடு காண்கின்றன


தும்பிக்கை நாயகனே! - வெண்பா

தும்பிக்கை நாயகனே தும்பைப்பூ மாலையனே
நம்பிக்கை வைத்தேன்நான் உன்மேல் - நலம்தந்து
நற்றமிழும் தந்தெனது நாவினிலே பாச்சுரக்க
வற்றாத பொய்கை யெனவா!

Saturday, January 13, 2007

நாம் சிறப்புமிகு தமிழை நம் இளையர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்!

வாழும் தலைமுறை வரும்த லைமுறைக்கு
மேலும் தமிழைமே விச்சேர்ப்பீர்! – சீர்தமிழ்
பரப்புவதும் நம்பணி களிலேஒன் றென்றால்
சிறப்பு மிகுமென்று சிந்தி!

வாழ்க்கைக்கு வழிகாட்டும் திருக்குறளை நாம் படித்துப் பயன்பெற வேண்டும்

எத்தனை பிரச்சினைகள் நித்தநித்தம் வாழ்வினிலே
அத்தனைக்கும் தீர்வொன்று உண்டு! - இரண்டடிக்
குறள்படித்து வாழ்வினிலே நாம்கடை பிடித்தால்
சிறக்கும் குலமென்று நம்பு!

தமிழ் வாழ்த்து

என் தமிழ்த் தாயை வணங்கி
நற் றமிழ்க் கடலில் மூழ்கி
நல் முத்து பலவும் எடுத்து
நா னிலத்தில் நான் உயர்வேனே!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Blogarama - The Blog Directory

[Valid Atom 1.0]